April 9, 2010

பக்தரின் வாதநோய் நீக்கிய குருவாயூர் கிருஷ்ணர்.


ஸ்ரீ மேல்புத்தூர் நாராயண பட்டதிரி என்ற நம்பூதிரி பிராமணர் பாரதபுழை என்ற நதியின் வடகரையில் திருநாவா என்ற ஷேத்திரத்திற்கு சமீபத்தில் பிறந்தார். இவரது தந்தை மாத்ருதத்தர் என்ற மகா பண்டிதர். பட்டத்திரி சிறுவயதில் தந்தையிடமே கல்வி பயின்றார்.

ஒருசமயம் அவருடைய வியாகரண குருவான அச்யுத பிஷாரடி வாத நோயால் பீடிக்கப்பட்டு வருந்தியபோழுது பட்டதிரி அவருக்கு சேவை புரிந்தார். அவருடைய நோயையும் யோகபலத்தால் தானே ஏற்றுக்கொண்டு அங்கங்கள் முடங்கியவரானார்.

குருவாயூரில்போய் தவம்புரிய நிச்சயித்து தன்னை அங்கு எடுத்து போகச் செய்து நாள்தோறும் பத்து சுலோகம் பாடலானார்.நூறு நாட்களில் பாடிமுடித்தபொழுது பகவான் ஸ்ரீகிருஷ்ணருடைய திருவருளால் நோயிலிருந்து விடுபட்டார்.
(நாராயண பட்டதிரி எழுதிய "ஸ்ரீமந் நாராயணீயம்" ஸ்ரீமத் பாகவதத்தை 1036 சுலோகங்களில் சுருக்கி வருணிக்கிறது)

April 4, 2010

வறட்டிகள் எழுப்பிய விட்டல் நாமம்.

(கிருஷ்ண பக்தை – ஜனாபாய்)
பண்டரிபுரத்தில் நாமதேவரின் இல்லத்தில் எப்போதும் பாண்டுரங்கனின் மகிமை பாடப்பட்டுவந்தது. நாமதேவரின் புதல்வி ஜனாபாய் பாண்டுரங்கனிடமும் அவரது அடியார்களிடமும் மிகுந்த பக்தியோடு சேவை செய்து வந்தாள்.

அன்று கீர்த்தனை முடிந்ததும் பாகவதர்களுக்காக உணவு சமைக்க ஜனாபாய் இல்லத்திற்கு விரைந்து வந்தாள். அடுப்பிற்காக வைத்திருந்த வறட்டிகளை அடுத்த வீட்டுக்காரி அபகரித்திருந்தது அவளுக்கு தெரிந்தது. ஜனாபாய் வறட்டிகளைக் கேட்க அந்த பெண் மறுக்க இருவருக்குள்ளும் வாய்ச் சண்டை வந்துவிட்டது. அங்கு வந்த நாம தேவர் அதிர்ச்சி அடைந்தார்.

"உன் வறட்டிகளை நான் எடுக்கவில்லை" என்று அந்த பெண் மறுக்க, "இல்லை நீதான் எடுத்திருக்கிறாய், அதை நான் நிரூபிப்பேன்" என்று ஜனாபாய் தந்தையிடம் உரைத்தாள்.

அடுத்த வீட்டிலிருந்து எல்லா வறட்டிகளும் கொண்டுவரப்பட்டன. ஜனாபாய் இறைவனிடம் "பாண்டுரங்கபிரபு, தீன தயாளா, அடியார் தொண்டில் ஈடுபடும்போதும், வறட்டி தட்டும்போதும் 'விட்டல், விட்டல்' என்று உன் நாமத்தை நான் ஜெபிப்பது உண்மையானால் நீ அதை நிரூபித்து அருள வேண்டும்" என்று வேண்டினாள்.

ஜனாபாய் வறட்டிகளை ஒவ்வொன்றாக கீழே போட்டார். ஜனாபாயின் வறட்டிகள் 'விட்டல், விட்டல்' என்ற திருநாம ஒலியுடன் கீழே விழுந்தன. மற்றவை வெறும் சத்தத்தை மட்டும் எழுப்பின.

கூடியிருந்த மக்கள் "ஆஹா என்னவோர் அற்புதம், ஜனாபாயின் வறட்டிகள் கூட விட்டலின் நாமத்தை கூறுகின்றனவே" என்று வியந்தனர்.



ஜெய், பாண்டுரங்க விட்டல் பிரபு கீ ஜெய்!


ராம கிருஷ்ண மிஷனின் "கதை மலர்" புத்தகத்திலிருந்து.